பால்யமும் பாளை வண்டியும் ..
வார விடுமுறை இன்று. வானம் விடியற்காலையிலேயே விழித்து, முற்றம் தெளித்து, செடி கொடிகளுக்கெல்லாம் தண்ணீர் தெளித்திருந்தது. மழை காரணமாக இதமான காலைக் குளிர், மெத்தையில் குப்புறக் கவிழ்த்து எனை எழவிடாமல் சோம்பலைக் காட்டி, போர்வைக்குள் அழுத்திவிடப் பார்த்தது. ஆனால், ஏழாவது தளத்தில் படுக்கையில் கவிழ்ந்திருந்த என் காதுக்குள் காகம் கரையும் சத்தம் கேட்டு, தூக்கம் தொலைந்துபோனது. தினமும் ஆசுவாசமின்றி இயந்திரமாய் கடந்துபோகும் எந்நாளையும் போல் இந்நாளையும் கடந்துபோக விருப்பமில்லாமல், சோம்பலை முறித்து, போர்வையைச் சுழற்றி வீசிவிட்டு எழுந்தேன். இந்நாளுக்காகவே காத்திருந்த மாதிரி, குளிர்ந்த நான்கு பாட்டில் 'மீன்கொத்தி மார்க்' நுரைத்த சோடாவைக் குடித்த வயிறுபோல வீங்கி இருந்தது துவைக்க வேண்டிய துணிக்கூடை. அதை அப்படியே துணி துவைக்கும் இயந்திரத்தில் கொட்டி ஓடவிட்டு, பல நாட்களுக்குப் பிறகு சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன் காலாங் ஆற்றங்கரை பூங்காவை நோக்கி. ஊத்தட்டுமா போகட்டுமா என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்த கரிய மேகம், அழகிய காரிகை ஆற்றில் அலம்பி முகர்ந்து இடுப்ப...