பனையும் வாழ்வும்
பனை அது வெறும் மரமன்று ஒரு பெறும் சமூகத்தின் வாழ்க்கை . மூவேந்தர்களில் சேர மன்னரின் குடிப் பூவாக வெள்ளையும் மஞ்சளும் கலந்த பனம்பூ இருந்திருக்கிறது. சேர மன்னர்களின் காசுகளில் பனை மரம் பொறிக்கப்பட்டுள்ளது. பனைமரமே சேரர்களின் காவல் மரமாக போற்றப் பெற்றது. பறம்பு மலையை ஆண்ட வேளிர் தலைவன் பாரியின் குடிமரமாக பனை இருந்திருக்கிறது. தற்போதைய தமிழ்நாடும் இலங்கையும் இணைந்து குமரியாற்றுக்கு புறம்பாய் விரிந்து கிடந்த தென்னிலப் பகுதிக்கு குறும்பனை நாடு என்ற பெயருண்டு இங்கு பஃறுளியாறு என்ற ஆறும், குமரிக்கோடு என்ற பன்மலையடுக்கத்து மலைத்தொடர் ஒன்றும் இருந்தன. அக்காலத்தில் வாழ்ந்திருந்த தொல்காப்பியர் பனை மரமன்று அது புல்லெனப்படும் என்கிறார். மூங்கில் ,தென்னை ,பாக்கு போலப் பனை புல்லினத்தைத் சேர்ந்ததாகும். நீண்டு உயர்ந்து வளர்வதை மரம் என்று அழைக்கும் தமிழ் மரபுப்படி பனையை மரம் என்று அழைக்கின்றோம். பனை, போந்தை, பெண்ணை என்று இதன் வேறு பெயர்களை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. கடல்கோளால் அழிந்து போன அந்த நிலப்பரப்பில் பெரும் பனை கூட்டம் இருந்திருக்க கூடும் . அதன் எச்சமாக இப்போதும் இலங்கை மற்றும் தென்தமிழகத்தில் பனை மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன முக்கியமாக ராமநாதபுரம் மாவட்டத்தில். "துருமேசுவரம்" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு "பனை" என்று பொருள் . இதில் இருந்துதான் இராமேசுவரம் என்று பெயர் உருவாகி இருக்க கூடும் .
இயல்பாகவே பெரிய பனந்தோப்புகளில் ஆண்பனை மிகுதியாகவும், பெண்பனை மரங்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. ஆண்பனை கட்டிட வேலைக்கு உதவும் எனினும் பெண்பனையே மிகுதியான பயன்தரவல்லது . பெண்பனை மரத்தில் தான் பதநீர் இறக்கப்படுகிறது. காய்களும் பயன்படுகின்றன. இவை காய்க்கத் தொடங்கும் போது தான் ஆண்மரமா இல்லை பெண்மரமா என்று அறியலாம். இவை பூப்பதற்கு பத்து முதல் பனிரெண்டு ஆண்டுகள் ஆகின்றன.
பல தலைமுறைகளாக பனை எங்கள் குடும்பத்தினர் வாழ்க்கையில் இரண்டென கலந்திருக்கிறது.. வைணவம் தலைத்தோங்கிய பகுதியில் வாழ்ந்த என் சேயோன் , வேறு சமூக பெண்ணிடம் கொண்ட காதலும், அந்த காதலுக்கு ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பும் , அதனால் உண்டான மோதல் காரணமாக அப்பெண் மரணிக்க , மனம் தளர்ந்த சேயோன் அங்கிருந்து குடிபெயர்ந்து வந்து அவர் குடியேறியது பனைமரங்கள் நிறைந்த நரிகள் நடமாடிய இப்போதிருக்கும் மரந்தலை மாடசாமி கோவிலின் பிற்பகுதி. அப்போது மாடசாமி கோவில் கொழுவைநல்லூர் ஊரின் உட்பகுதியில் இருந்தது. அது கிராமங்கள் முழுமையாக உருவாகாத காலம் . அக்கால கட்டத்தில் பல குடிபெயர்வுகள் நடந்து கொண்டிருந்தது .. இப்பகுதி பொருநை ஆறு குணக்கடலில் கலக்கும் ஆற்றுப்படுகையாதலால் வண்டல் மண் நிறைந்த செழிப்பான விவசாய நிலங்கள் நிறைந்திருந்தது மக்கள் இப்பகுதியில் குடியேற முக்கிய காரணமாக அமைந்தது .
ஆத்தூர் குளம் முற்காலத்தில் மக்கள் வாழ்ந்த குடியிருப்பாக இருந்தது . அப்போது இருந்த ஆங்கிலேய அரசு அதை நீர்பிடிப்பு பகுதியாக மாற்றி , அங்கிருந்த மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற , அங்கிருந்து வெளியேறிய மக்கள் . குளத்தை சுற்றி இருந்த நிலப்பகுதிகளில் குடியேற கிராமங்கள் உருவாகின . அவ்வாறு உருவாகிய கிராமங்கள் அந்த நிலத்தின் அடையாளத்தை தாங்கிய அடையாளப் பெயர்களையும், காரணப் பெயர்களையும் கொண்டிருந்தன. அப்பெயர்கள் காலபோக்கில் திரிந்து மாறி இருக்கின்றன.
தூதுகுடி - தூத்துக்குடி யாக மாறியதை போல
முத்தையர் புரம் - முத்தையாபுரம் ஆனது கோபுரங்காடு - கோவங்காடு ஆனது , .மஞ்சனக்காயல் - மஞ்சள்நீர்காயல் ஆகவும் , குலைநெல்கரிசை - குலையன்கரிசல் ஆக திரிந்தது .
- ஆற்றின் கரையில் இருந்த ஊர் ஆற்றூர் எனப்பட்டது . இக்காலத்தில் ஆத்தூர் என அழைக்கப்படுகிறது . "அதைச் சேர்ந்த மங்கலம் தற்போது சேந்தமங்கலம் "எனப்படுகிறது.
"சொர்க்கப்பிள்ளை கரை - சொக்கப்பழங்கரை" ஆனது
உமரி செடிகள் நிறைந்திருந்த பகுதி உமரிக்காடு எனவும் ..அவ்வாறே தலைவன்வடலி , தண்ணீர்பந்தல் , வரண்டியவேல் ,வெள்ளக்கோவில், மரந்தலை , கொளுவைநல்லூர், வாழவல்லான், முக்கானி, போன்ற ஊர்கள் உருவாகி இருந்தன.
அவை உருவான பிறகு கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்பு தான் வியாபாரம் செய்யும் குடிகளாக கருதப்பட்ட நாடார் மக்கள் மட்டும் ஒன்றிணைத்து உருவாகிய ஊருக்கு புன்னைசாத்தான்குறிச்சி என்ற பெயர் சூட்டப்பட்டது.
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமும் , முக்கிய துறைமுக பட்டிணமான கொற்கை யில் இருந்து கடல் விலகி சென்றபிறகு ( பழைய ) காயல் புதிய துறைமுகமாக உருவானது . காலப்போக்கில் அப்பகுதியும் மணல் மேடிட்ட பிறகு உருவான புதிய காயல் பகுதிக்கு புதிய காயல் என்று பொருள் வருமாறு புன்னைகாயல் என்ற பெயர் வந்தது ,
புன்னை என்ற சொல்லுக்கு புதிதாக உருவான அல்லது உருவாக்கப்பட்டது என்று பொருள் . சாத்தான் என்ற சொல் சாத்து சாத்தன் என்ற வேற்ச் சொல்லில் இருந்து உருவானது . சங்க காலத்தில் வணிகர் கூட்டத்தை சாத்து என்றும் வணிக கூட்டத்தில் ஒருவனை சாத்தன் என்றும் குறிப்பிடுவது தமிழ் நெறி . அதை போல சாத்தன் என்பதற்கு பெருங்குடிமக்கள் என்று பொருள் உண்டு . சங்ககாலத்தில் புலவர்கள் பலர் தங்கள் பெயருக்கு பின்னால் சாத்தன் என்பதை இணைத்து கொள்வதை பெருமையாக கருதினார்கள்.
• அழிசி நச்சாத்தனார்
• ஆடுதுறை மாசாத்தனார்
• ஆலம்பேரி சாத்தனார்
• உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
• உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
• ஒக்கூர் மாசாத்தனார்
• கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
• கருவூர்ச் சேரமான் சாத்தன்
• கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
• சாத்தனார்
• சீத்தலைச் சாத்தனார்
• செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
• தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
• பிரான் சாத்தனார்
• பெருஞ்சாத்தனார்
• பெருந்தலைச் சாத்தனார்
• பெருந்தோள் குறுஞ்சாத்தன்
• பேரிசாத்தனார்
• மோசி சாத்தனார்
குறிச்சி என்பதற்கு கிராமம் , ஊர் என்று பொருள் . அவ்வாறே புதிதாக உருவாக்கப்பட்ட பெருங்குடிகள் அல்லது வணிககுடிகள் வசிக்கும் ஊர் என்ற பொருள் வரும் வகையில்
"புன்னைச்சாத்தான்குறிச்சி" என்ற அழகிய பெயர் கொண்ட கிராமம் உருவாகியது. அதில் ஒரு குடும்பமாக இணைந்து கொண்டார் . மறந்தலை பனங்காட்டிற்குல் வசித்த என் பூட்டன் அண்ணாமலை நாடார் மறந்தலை பனங்காட்டில் தான் வாழ்ந்த நிலத்தில் நின்ற பனைமரங்கள் சிலவற்றை வெட்டி கொணர்ந்து குடிசை அமைத்து புதியகுடியை ஆரம்பித்தார் ..
முற்க்காலத்தில் முதன் முதலில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்வதை " சுவடி தூக்குதல்" என்பர் . எழுதும் பனை ஓலையை அழகாக வாரி, தொளையிட்டு வரிந்து கட்டுவது அக்காலத்தில் ஒரு கலையாக கருதப்பட்டது . பனை இல்லையேன்றால் பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றைய தலைமுறைக்கு கிடைத்திருக்காது.
எனது பாட்டன் முத்து நாடாரும் தனது கல்வியை அவ்வாறே தொடர்ந்தார். அவர் விருப்பத்துடன் சோதிடமும் கற்றுக்கொண்டார். அவர் எழுதி பயின்ற ஓலைச்சுவடிகள் இன்னும் இருக்கின்றன. வடலிபனையில் சிறிய ஓலைகளை வெட்டி அவர் செய்யும் விசிறிகள் தான் எங்களை குளிர்வித்தன.
ஏப்ரல் மே மாதங்களில் வெப்பம் அதிகரித்து வீசும் அனல்காற்றில் உடல் தளர்ந்து நாவறண்ட கதியற்ற மனிதனுக்கு அமிர்தமாகிறது , அந்த கரிய உயர்ந்த கரம் சிரம் விரித்து நிற்க்கும் அன்னை பத்ரகாளியின் வடிவமான பனை மரத்தின் பதநீர் . அதை வெறும் பதநீராக பார்க்காமல் , அன்னை பத்ரகாளி அவளின் மகனுக்கு அளிக்கும் தாய் பாலாக கருதுகின்றனர் அவளின் மைந்தர்கள்..
நாடார் சமூகத்தவர்களே பத்ரகாளியம்மனை குலதெய்வமாகவும் ஊர்தெய்வமாகவும் வைத்து போற்றுகின்றனர். முத்துக்குட்டி சுவாமியை அடிப்படையாக கொண்ட அய்யாவழிபாட்டிலும் பத்திரகாளியம்மனுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. இதற்குக்காரணம் பத்திரகாளியம்மனை வழிபடும் மக்களுக்கும் அம்மனுக்கும் உள்ள தொடர்பே ஆகும். அய்யா வழிபாட்டில் அவர் எழுதிய அகிலத்திரட்டில் பத்திரகாளியைத் தம்கை என்று பல இடங்களில் விளக்கினார். அய்யா வைகுண்ட சுவாமிக்கும், பத்திரகாளியம்மனுக்கும் உள்ள சகோதர உறவு நாடார் சமூகத்திற்கும் பத்திரகாளியம்மனுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
பனை இருக்கும் இடத்தை பொருத்து பதநீரின் சுவை மாறுபடும். நீர்நிலைகள் அருகில் நிற்க்கும் பனைகளில் கிடைக்கும் பதநீரை விட பறந்தலைகளிலும், தேரிக்காடுகளிலும் கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது . அதிலும் மாலை நேரங்களில் இறக்கப்படும் மாலைப்பதநீர் சுவை அதிகம் . கம்பன் தன் இராமாயண காவியத்தில் இராமருடைய திருமண விருந்திற்கு வருகின்ற வழியில் அரசர்களும் அரசிகளும் தாங்கள் வைத்திருந்த வெள்ளிக்கிண்ணங்களில் "பசு நரு" என்ற மாலைப்பதநீரை வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பனைமரத்து பன்னாடையால் வடிகட்டப்பட்டு இயற்க்கையாகக் கிடைக்கும் பனங்கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக் காணப்பட்டது. மன்னர் , பாணர் புலவர், கூத்தர் , பொருநர் ,விறலியர் அனைவருமே மதுவுண்டு களித்தனர். கள்ளுக்கு இன்சுவையும் நறுமணமும் ஊட்டுவதுண்டு. கள்ளுண்டவர்கள் புளிச் சுவையை விரும்பி களாப்பழம், துடரிப்பழம், நாவற்பழம் முதலிய பழங்களை பறித்து தின்பதுண்டு.
அப்பா வீடுகட்டும் போது எங்கள் நிலத்தில் இருந்த பல ஆண் பனைகள் வெட்டப்பட்டு எங்கள் வீட்டின் உத்திரமாக மாறி இருந்தன. மீதம் இருந்த எட்டு பனைகளில் இரண்டு மட்டும் பெண்பனை. அதில் இருந்து போதுமான அளவு பதநீர் , நுங்கு அனைத்தும் கிடைத்தன... பதநீர் கிடைக்கும் பருவங்களில் மீதமாகும் பதநீருடன் அம்மா கத்தரிக்காய் அல்லது பூசணிக்காய் சேர்ந்து பாவு காய்ச்சுவார். அது மாதகணக்கில் கெட்டுவிடாமல் உண்பதற்கு சுவையானதாக இருக்கும் . நன்கு பழுத்த பனம்பழத்தை விறகு அடுப்பில் வைத்து சுட்டு சாப்பிடுவது சுகம் தரும் , கார்த்திகை மாதம் பனை ஓலை கொழுக்கட்டை , பனங்காத்தாடி ,நுங்கு வண்டி , பிளாப்பெட்டி, பாய் , நார்கட்டில், சொளவு, தடுக்கு, மிட்டாய் பெட்டி என பனை எங்கள் வாழ்வியலில் ஒன்றன கலந்திருந்தது. . இப்போதெல்லாம் சிறுவயதில் என் உள்நாக்கு தொட்டு உள்ளத்தில் பதிந்து போன அந்த சுத்தமான பதநீரின் சுவையை தேடித்தேடி அழைக்கின்றேன் தவிக்கின்றேன் , கால ஓட்டத்தில் பனையும் பனக்காடும் எங்கள் கைவிட்டு போன பிறகு..
-விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️
Comments
Post a Comment