"அள்ளும் அல்லும்"


தேக்கு மரங்கள் அடர்ந்த தேக்கடியின் பெரியாற்று கரையில் கண்ணொளி புகாத காரிருள் கானகத்தில் கரும்பாறையில் மீது அமர்ந்து , இரவில் பூத்து மணக்கும் காட்டு அல்லி மலர்களின் வாசனையை நுகர்ந்தபடி , அம்மலர்களின் மகரந்தத்தை கவர்ந்து செல்லும் வண்டுகளின் ரீங்காரத்தை கேட்டபடி , காடுமுழுவதும் ஒளிரும் மினுக்கட்டான் பூச்சிகளின் வெளிச்சத்தில் பச்சையம் தேடி உன்னும் மான்களை பார்த்தபடி , நீண்டு நெடிய வளர்ந்த மரங்கள் , தவழ்ந்து வரும் மேகங்களை தங்கள் கிளைகளால் களைத்து விளையாடுவதை ,ஒளியாண்டு தூரத்தில் ஒளிரும் விண்மீன்களின் மங்கிய ஒளியில் கண்டபோது என் மனதை "அள்ளியது அல்லும்"  

 தினம் தினம் உருமாறி வரும் உலகில் இன்றும் தன் உருவில் மாறாமல் இருப்பது இருள் தான். இருண்ட கருவறையில் இருக்கும் இறைபோல், அடர்ந்த இருளுக்குள் உறைந்திருக்கிறது இந்த பேரண்டத்தின் ஜீவன். கருப்பை எனும் இருட்டுக்குள் நமக்கு கை கால்கள் முளைப்பது போல் , பூமியின் இருட்டுக்குள் கோடிக்கணக்கான விதைகள் முளைக்கின்றன , மரங்கள் தளிர்க்கின்றன, உயிர்கள் உருவாகின்றன. அதனால் தானா என்னவோ உடல் அயர்ச்சியடைந்து மீண்டும் தெளிர்ச்சியடைய நமக்கு இருள் அவசியப்படுகிறது. 

  இரவு வந்தாலே!! களிப்பு தானே வரும் , ஆடி பாடி விளையாட சிறந்த பொழுது இரவை போல ஏதும் இல்லை , வீட்டின் முற்றத்தில் நின்று நிலவை காட்டி அம்மா ஊட்டிய பால்சோறும் , நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து உண்ட நிலாச்சோறும் , கண்ணாமூச்சி , கொக்கோ , பூப்பறிக்க வருகிறோம், ஒரு குடம் தண்ணி எடுத்து , பச்சைக்குதிரை, குலைகுலையாய் முந்திரிக்காய் என்று இரவின் நிழலில் ஆடும் ஆட்டங்கள் பற்பல ... 

மன்மதன் , பெருமாள், காலன், காளி என காதல்தேவன் முதல் காக்கும் தேவன் மற்றும் காலதேவன் வரை அனைத்து இறையின் நிறம்மும் இருள் தான் . கருப்பு , கருமாரி என பெயரும் காரிருள் தான் . இறைவனே இருளை ஆள்வதால் தான் பலிபூஜை சாமியாட்டம், களியாட்டம் என்று சாமக்கொடைகள் நடக்கின்றன. சாமியும் நடுசாமத்தில் கோட்டையை விட்டு வெள்ளை குதிரையில் ஏறி வீதி உலாவவுகிறார் வேட்டைக்கும் போகிறார்.  

பேரண்டத்தின் பெரும்வெளி இருளால் சூழப்பட்டுள்ளது. அதில் சுமார் 12.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு நிகழ்ந்தததாக கணக்கிடப்பட்டுள்ளது . அதில் 1.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பால்வெளி மண்டலம் உருவாகி இருக்கிறது . அதிலிருக்கும் நம் சூரியன் 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.  அதற்குள் பூமி போன்ற கோள்கள், அந்த கோள்களில் சிலவற்றிற்கு சந்திரனைப் போன்று துணைக் கோள்கள் இருக்கின்றன.. பால்வெளி அண்டத்தில் 200 பில்லியன் வின்மீன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, 

இருள் என்பது ஒரு நினைவுகளின் சுரங்கம் , அங்கு தான் நம் நினைவுகள் அனைத்தும் சேமிக்கபடுகிறது , அந்த நினைவுகள் தான் இரவோடு இணைந்து உறங்கும் போது நமக்கு கனவாக வருகிறது , நாம் எதை சேமித்து வைக்கின்றோமோ அதை பொருத்து அமைகிறது கனவின் தன்மை . இருளில் தான் நம் முன்னோரின் காலடித்தடங்கள் இன்னும் அழியாமல் காக்கப்படுகிறது. மனம் குழப்பத்தில் தவிக்கும் போதெல்லாம் சில மணித்துளிகள் கண்களை மூடி , அந்த அடரந்த இருட்டுக்குள் அமைதியாக பயணிக்க குழம்பிய மனது தெளிவாகும் ..

-விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️

Comments

Popular posts from this blog

செங்கதிரோன் சேயோன்

ஆழ்கிணறும் ஆழ் மனமும்

நாட்டமற்ற நாய் அனுபவம் (Unpleasant dog experience )