நாவில் நின்ற நாவல் பழச்சுவை
ஊருக்கு வரும் போதெல்லாம் அந்தந்த (சீசன்) பருவகாலங்களில் விளையும் உணவுவைச் தேடிச் சுவைப்பதுண்டு. அவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு உணவுக்கும் தனிச்சுவை உண்டு , நான் சிறுவயதில் சுவைத்த அந்த உணவுகளில் பல தற்போது கிடைத்தாலும் சிலவை கண்ணில் அகப்படுவதில்லை ..
இந்த மே மாதம் ஊருக்கு வந்த போது மஞ்சள் , சிவப்பு நிறங்களில் கொல்லாம் பழம் கிடைத்தது. (https://youtube.com/shorts/kl1NF8DrvWE?si=i3_XkWC_3myFZCyn)
அதிக சாறுடன் துவர்ப்புப்சுவை நிறைந்த கனி அது . எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் செம்மண் தேரிக்காடுகளில் நிறைந்திருக்கும் கொல்லாம் மரங்களில் ( முந்திரி மரம், cashewnut ) ஏப்ரல் மே மாதங்களில் காய்த்து கிடக்கும் அவற்றை வேண்டமட்டும் பறித்து சுவைக்கலாம், ஆனால் அவற்றின் விதைகளை மட்டும் அங்கே விட்டுவிட வேண்டும் என்பது அந்த காட்டின் உரிமையாளர்களின் கட்டுப்பாடு ஏன்னென்றால் அவை தான் cashewnut என்றழைக்கபடும் முந்திரிக்கொட்டைகள்.
அதே போல கொடுக்காப்புளி, வெள்ளரிக்காய், மாம்பழம் , வீட்டில் விளைந்த பப்பாளி மற்றும் நுங்கு , பதநீர் , பனங்கள்ளும் கிடைத்தன..
ஆனால் ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் நாட்டு பேரிக்காய் கிடைக்கவில்லை கடைகளில் பேரிக்காயை கேட்டால் pear எனப்படும் வெளிநாட்டு இறக்குமதி பழத்தை தருகின்றனர்.
அதே போல சிலந்தி என்ற ஒருவகை புல்லின் வேர் தண்டை அவித்து கொண்டு வருவார்கள். அளவில் மிகச் சிறிய வெங்காயம் போன்ற தோற்றத்தில் கொத்தமல்லியின் விதை அளவில் இருக்கும் , அதன் சுவை கிட்டத்தட்ட அவித்த நிலக்கடலையை போன்று இருக்கும் , அவையும் இப்போது கண்ணில் மட்டுமல்ல நம் மணணிலிருந்தே மறைந்து விட்டது போல தெரிகிறது .
பார்த்தாலே நாவில் உமிழ்நீரை ஊறவைக்கும் நவாப்பழம் ( நாவல்பழம் , நாவற்பழம்) எனக்கு ஊரில் கிடைக்கவில்லை.. இன்று சிங்கப்பூர் முஸ்தபா பல்பொருள் அங்காடிக்கு சென்ற போது எனது கண்ணில் பட்டது . நாவற்பழத்தின் அடர்கருநீலத்துக்குள் இருப்பது ஒரு சுவை அல்ல சுவைகளின் பேருலகம் , சிறுவயதில் நவாப்பழத்தின் திரண்ட சதைபகுதியை சுவைத்து உண்ண பிறகு அதன் கொட்டையை வாய் போட்ட உதப்பி சிறிதாக அதை கடித்து அதன் மேல் தோல் கழறக் கழற அதன் சுவை நாக்கில் ஏறி உச்சத்துக்கு செல்லும் , தப்பிப் தவறி சற்றே அழுத்திக் கடித்து கொட்டையை உடைத்து விட்டால் அவ்வளவுதான் ! உள்ளே இருக்கும் பச்சை நிறப் பருப்பின் கசப்பு நாக்கில் ஏறி நம்மை படாதபாடு படுத்திவிடும்.
நாவற்பழங்களில் பலவகை உண்டு நரிநாவல் , வெண்நாவல், நீர்நாவல், கொடிநாவல் சிறுநாவல் என பலவகையுண்டு , அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவையுண்டு. நரிநாவலுக்கு துவர்ப்பு சுவை அதிகம், வெண்நாவல் புளிப்பு சுவையுடையது, சிறுநாவல் சற்று இளங்காரமாக இருக்கும் . நாம் எந்தச் சேர்மானத்தோடு அவற்றை சுவைக்கிறோம் என்பதை பொருத்து அவற்றின் சுவை மாறுபடும்.. இதோ அவற்றை சுவைக்கின்றேன்.. இனிப்பும் துவர்ப்புமாக கலந்து சுவை மனதை பரவசமாக்க, முதலில் நீலமாக மாறிய நாக்கு நேரம் செல்லச்செல்ல செந்நீலமாக மாறியது...
- விக்கி இராஜேந்திரன்.. ✍️✍️✍️
Comments
Post a Comment