பனையும் வாழ்வும்
பனை அது வெறும் மரமன்று ஒரு பெறும் சமூகத்தின் வாழ்க்கை . மூவேந்தர்களில் சேர மன்னரின் குடிப் பூவாக வெள்ளையும் மஞ்சளும் கலந்த பனம்பூ இருந்திருக்கிறது. சேர மன்னர்களின் காசுகளில் பனை மரம் பொறிக்கப்பட்டுள்ளது. பனைமரமே சேரர்களின் காவல் மரமாக போற்றப் பெற்றது. பறம்பு மலையை ஆண்ட வேளிர் தலைவன் பாரியின் குடிமரமாக பனை இருந்திருக்கிறது. தற்போதைய தமிழ்நாடும் இலங்கையும் இணைந்து குமரியாற்றுக்கு புறம்பாய் விரிந்து கிடந்த தென்னிலப் பகுதிக்கு குறும்பனை நாடு என்ற பெயருண்டு இங்கு பஃறுளியாறு என்ற ஆறும், குமரிக்கோடு என்ற பன்மலையடுக்கத்து மலைத்தொடர் ஒன்றும் இருந்தன. அக்காலத்தில் வாழ்ந்திருந்த தொல்காப்பியர் பனை மரமன்று அது புல்லெனப்படும் என்கிறார். மூங்கில் ,தென்னை ,பாக்கு போலப் பனை புல்லினத்தைத் சேர்ந்ததாகும். நீண்டு உயர்ந்து வளர்வதை மரம் என்று அழைக்கும் தமிழ் மரபுப்படி பனையை மரம் என்று அழைக்கின்றோம். பனை, போந்தை, பெண்ணை என்று இதன் வேறு பெயர்களை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. கடல்கோளால் அழிந்து போன அந்த நிலப்பரப்பில் பெரும் பனை கூட்டம் இருந்திருக்க கூடும் . அதன் எச்சமாக இப்போதும் இலங்கை மற்...